Powered By Blogger

Monday 28 October 2013

பசி என்ற உணர்வு நம்மில் எத்தனை பேருக்கு தெரியும் ?



பசி என்ற உணர்வு நம்மில் எத்தனை பேருக்கு தெரியும் ? 

 

 


நம்மில் பலரின் நேரமும் கடமையும் பணத்தின் பின் தான் ஓடிக்கொண்டுள்ளது. அதுவும் மத்திய தர வர்க்கதில் வீட்டின் காலை நேரத்தின் பரபரப்பு சொல்லி மாளாது. பிள்ளைகளை எழுப்பி பள்ளிக்கு அனுப்பவது முதல் ஆண்களை கிளம்பி அலுவலகம் அனுப்பும் வரை ஒவ்வொரு நொடியும் முக்கியம் தான். இதில் தானும் வேலைக்கு போகும் பெண்கள் என்றால் இன்னும் பாவம்!.

அதிலும் அந்த காலை டிபன் நேரம் இருக்கே.. சீக்கிரம், சீக்கிரம்  நேரம் ஆகிவிட்டது, வேன் வந்து விட போகிறது , அல்லது பெல் அடித்து விட போகிறது - இந்த குரல் உச்சஸ்தாயில் பிள்ளைகளின் காதில் திணிக்கபட்டு கொண்டே இருக்கும். 

ஆணோ, - செய்தி சேனல்களில் கண்ணை நிலைக்க விட்டு அல்லது காதில் செல்போனை வைத்து உம், ஊம் என்று சொல்லிக்கொண்டே தட்டில் இருப்பதை விண்டி, விண்டி உள்ளே தள்ளிக் கொண்டே அப்ப அப்ப திரும்பி குழந்தையின் தட்டை ஒரு பார்வை பார்த்து கொள்ள வேண்டியது.

பெண்ணோ, - உட்கார்ந்து சாப்பிட கூட நேரமில்லாமல் நடந்து கொண்டே அள்ளி அள்ளி போட்டுக்கொண்டு கிளம்புவது.

என்ன சாப்பிட்டோம்? அதன் சுவை என்ன என்பது உண்மையில் முக்கால் வாசி பேருக்கு தெரியாது.

மதியமோ கிடைக்கும் அரை அல்லது ஒரு மணி நேரத்திற்குள் கடமையே என்று கொட்டி கொண்டு விட்டு, ஆண்கள் சிகரட்டும் கையுமாக ஒதுங்கி தம் தம் பிரதாபங்களையும், டேமேஜர்களின் அஷ்டகோணங்களையும், - பெண்கள் அக்கம் பக்க புறணிகளும், -  பிள்ளைகள் விளையாட செல்லும் முன்பே - கடமை அழைக்க ஒட்டி கொண்டு இருந்து விட்டு மாலை ஆனவுடன் அடித்து புடித்து வீடு வந்து சேருவது.

மாலையில் கடைகளும், சமையல் அறைகளும் மற்றும் ஹோம் வோர்க்குகளும், ஒன்று முதல் இரண்டு மணி நேரங்களை சாப்பிட்டு முடிக்க, - அனைவரும் தொலை காட்சி முன் உட்கார்ந்து கொள்வது. ஒருபக்கம் தொலை காட்சி ஓட மறு பக்கம் செல்போனுடன் உறவாட,-  கொஞ்சம் இருப்பவர்கள் லேப்டாப் பொட்டி தட்ட இத்தனை அலப்பறைகளுடன் சேர்த்து இரவு உணவு விழுங்கி தள்ளுவது.

இதற்க்கு நடுவில் இரண்டு, மூன்று டம்ளர் டீ தண்ணி அல்லது காபி தண்ணி ஒன்றிரெண்டு பிஸ்கட்டோ அல்லது பஜ்ஜி போண்டாவோ உள்ளே தள்ள பட்டிருக்க - அன்றைய நாள் முடிவுக்கு வருகிறது.

அடுத்த நாளும் அதற்க்கு அடுத்த நாளும் இதுவே ரிப்பீட்டு எதுவரை? "அப்பீட்டு" ஆகும் வரை.

"அப்பீட்டு" எப்ப வரும்? எங்கேயாவது, எப்பவாது ஏதோ ஒரு சேவை நிறுவனத்தின் ஐடி கார்டு தொங்க, வெள்ளை அங்கி அணிந்து "வாங்க வாங்க பிரீயா.. சுகரு, பீபி, கொலஸ்டிரால் செக் பன்றோம்" னு அழைக்க நாமும் "பிரீ" தானேன்னு கைய நீட்டுவோம் பாருங்க, 'அப்ப வரும்' !
அப்புறம் என்ன?  நாலு மூணு ஆகும், மூணு ரெண்டு ஆகும் கூடவே கொஞ்சம் மாத்திரை அள்ளி போட்டு கொண்டு ஓட வேண்டும்.

வேற வழி வாங்கி வைத்த லோனை கட்ட வேண்டாமா? நம்ம பிள்ளைங்கல்லாம் சாதரான பள்ளியிலா படிக்குது? பணம்! பா பணம்!! கட்டி தான் தீரனும், அதுக்கவாக மூச்சு பிடிச்சு ஓடதான் செய்யணும்.
மூச்சு வாங்கும் கேப்பில் யாருகிட்டாயாவது 'புலம்ப' அவர்களிடம் இருந்து வரும் பதில், "உனக்கெல்லாம் இப்ப தான், எனேக்கெல்லாம் அப்பவே!!" என்று அவங்க சுகர் வாங்கின சாதனையே!!! சொல்லுவாங்க பாருங்க... அப்ப தான் நமக்கு நிம்மதி வரும். கூடவே சொல்லுவாங்க பாருங்க, "இப்ப வர்ற எல்லா உணவும் உரம் போட்டு போட்டு விசமா மாறிடிச்சுங்கணு." அப்போ நினைப்போம், இது நம்ம பிரச்சினை இல்ல, நாட்டு பிரச்சினை போல, எல்லோருக்கும் வர்றது! நமக்குனு!! அந்த நிம்மதியே தனிதாங்க
.
ஆனா, எப்பவாது நம்ம வயதில் இருக்கும் உடல் உழைப்பு செய்கிற - கொத்தனார், எலெக்ட்ரீஷியன் மாதிரி ஆளுங்க மேலே ஏறி, கீழ குதித்து - வேலை செய்யறத பாக்கும் போது வரும் பாருங்க ஒரு டவுட்? "நம்மள மாதிரி தானே இவனுகளும் சாப்பிடுகிரானுங்க, இவனுகளுக்கு பெருசா ஒண்ணும் வரமாட்டுங்கிதே?" அப்படினு தோணும், ஆனா உண்மை என்னனா? நம்ம எள்ளுக்கு எள்ளு தாத்தா சொன்னத நாம கண்டுக்காம விட்டது தான் காரணமுங்க, அது இதுதாங்க...


//குறள் 942:
மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது
அற்றது போற்றி உணின்.
கலைஞர் உரை:
உண்ட உணவு செரிப்பதற்கான கால இடைவெளி தந்து, உணவு அருந்துகிறவர்களின் உடலுக்கு வேறு மருந்தே தேவையில்லை.
மு.வ உரை:
முன் உண்ட உணவு செரித்த தன்மை ஆராய்ந்து போற்றியப் பிறகு தக்க அளவு உண்டால், உடம்பிற்கு மருந்து என ஒன்று வேண்டியதில்லை.
சாலமன் பாப்பையா உரை:
ஒருவன் முதலில் உண்டது சீரணமாகிவிட்டதை நன்கு அறிந்து அதன் பிறகு உண்டால், அவன் உடம்புக்க மருந்து என்று ஒன்று வேண்டியது இல்லை.//


இதை, மறந்துட்டு அவசர அவசரமாக சாப்பிடுகிறோம். முழுசு, முழுசா முழுங்கிறோம். சீரணம் ஆகும் முன் மறுபடியும் நிரப்பறோம். அப்புறம் ஏன் வராது "அப்பீட்டு" ?. அமிர்தமே, ஆனாலும் பசிக்காமல் புசித்தால், - அது விஷம் தானுங்க..

"ஒரு நாளைக்கு ஒருவேளையாவது பசித்த பின் சாப்பிடுவோமுங்க." .  

4 comments:

  1. பயனுள்ள அருமையான பதிவு
    சொல்லிச் சென்றவிதம் மனம் கவர்ந்தது
    பகிர்வுக்கும் தொடரவும் வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. உங்கள் கருத்துக்கும் வருகைக்கும் நன்றி, தொடர்ந்து வாருங்கள் .

      Delete
  2. வணக்கம்
    பதிவு அருமை வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. நன்றி ரூபன் , கருத்துக்கும் வருகைக்கும் ....தொடர்ந்து வாருங்கள்

      Delete